உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றம்
இந்த கலந்துரையரங்கத்தில் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்துவது என்ற பெயரில் கட்டுரைகள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மலேசியா, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் எழுத்துக்களை மாற்றுவது என்ற முடிவை மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. இதையொட்டி செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான திரு.இராசேந்திரன் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துக்கள் மாற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.பொதுவாக ஆய்வரங்கங்களில் ஆட்கள் குறைவாக இருந்த நிலையில் எழுத்து மாற்றம் தொடர்பான அரங்கம் நிறைந்து வழிந்தது. பலர் இடம் இல்லாமல் திருப்பிச் சென்றனர். அதே நேரத்தில் அந்த அமர்வு முடியும் வரை அரங்கம் விருவிருப்பாகவே இருந்தது.
தமிழறிஞர் நாக. இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது என நடுவர் அறிவித்து முடித்துவிடும் படி தலைவர் கூறிய போது அரங்கத்தில் இருந்தவர்கள், தலைவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது எங்கள் உயிராதார பிரச்சனை, எனவே அவரை பேசவிடுங்கள் என்று தெரிவித்த போது அரங்கம் விருவிருப்படைந்தது. பார்வையாளர்களின் கோரிக்கையின் அடைப்படையிலும், எதிர்ப்பின் அடிப்படையிலும் தலைவர் வேறு வழியில்லாமல் கால நீட்டிப்பு அளித்தார். மேலும் நேரமாவதால் தலைவர் மீண்டும் எச்சரித்தார். பேராசிரியர் செல்வக்குமார் அடுத்து கட்டுரை வாசிக்க இருந்ததால் தனது நேரத்தை விட்டுகொடுத்து நாக. இளங்கோவனை வாசிக்கும் படி சொன்னார். இருப்பினும் அவரால் குறித்த நேரத்தில் கட்டுரையை முடிக்க இயலவில்லை.
அடுத்து பேசிய பேராசிரியர் செல்வக்குமார் நாக. இளங்கோவனின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்று தான் என்று தன் பேச்சைத் தொடர்ந்தவர் தாம் என்ன சொல்லவருகிறார் எனபதை பதிவு செய்து எழுத்து மாற்றம் தமிழுக்கு கேடானது என வலுவான ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.
முன்னதாக மணியம் அவர்கள் வேறு அமர்வுக்கு தலைமை வகித்தமையால் வர இயலாமல் போனதால் அவரது அனுமதியுடன் அவரது நண்பர் எழுத்து மாற்றம் தேவையற்றது என்ற கருத்தை எடுத்துரைத்தார்.
27-06-2010 அன்று பேராசிரியர் பெஞ்சமின்.லெ.பொ எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கது பொருத்தமா? என கேள்வி எழுப்பிய பேராசிரியர் எழுத்து மாற்றம் தேவையில்லை என்பதையே வலியுறுத்தினார்.






நடக்க இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக் குழு துணைத் தலைவருமான வா.செ.குழந்தைசாமி தலைமையில் ரகசியமாக நடந்துவருவதாக தமிழுணர்வாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளரும், உத்தமம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினருமான கோ.சுகுமாறனை சந்தித்து பேசினோம்.
“இந்திய மொழிகளில் மிகக் குறைந்த எழுத்துக் கொண்ட மொழி தமிழ்தான். அதில் ஏன் மாற்றம் கொண்டுவர வேண்டும்? தந்தை பெரியார் 11 எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்தார். அதனால் எவ்வித இடையூறும் இல்லை. இதற்காக பெரியார் மிகப் பெரிய தண்டனை அனுபவித்தார். தமிழக அரசு அவரது புத்தகங்களை நூலகங்களில் வாங்க மறுத்தது. பின்பு எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அந்த எழுத்துக்கள் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்மொழி அழகிய நோக்கிலும் தத்துவ நோக்கிலும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றது.
“தமிழ் எழுத்துக்கள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுக்கப்பட்டு தமிழ் எழுத்து வடிவத்தை எளிமைப்படுத்துகிறோம் என முடிவெடுத்துள்ளது. இது நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்குச் சமம். தமிழர்களை திருமணம் செய்துகொண்ட வேற்று மொழியினர் கூட தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்கள் கூட தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை. ஜப்பான், சீன மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை எழுதும்போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணைய தளத்தில் கூட தங்குதடையின்றி புழங்குகின்றனர். எழுத்துமாற்றம் என்பது தமிழ் வழி கற்கும் அப்பாவி மாணவர்களை பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது” என்றார்.





Recent Comments