Archive

Author Archive

புதுச்சேரியில் விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டம்

விக்கிப்பீடியா

இடம்: வணிக அவை சிறிய அரங்கம், நாள்: 20-02-2011

காலம்: காலை 10.00 மணிமுதல் பகல் 1.00 மணிவரை

தலைமை: இரா.சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்,

(புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்)

நிகழ்ச்சி நிரல்: 10:00 – தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்

11:00 – விளக்கப் பயிற்சிகள்

12:00 – கலந்துரையாடல்

விக்கிப்பீடியாவை அறிமுகம் செய்து விளக்கம்:

அ.ரவிசங்கர், நிர்வாகி (விக்கிப்பீடியா-தமிழ்)

விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது தளையற்ற உள்ளடக் கங்களைக் கொண்ட ஒரு இலவச கலைக்களஞ்சியமாகும் (encyclopedia). பலரின் கூட்டு முயற்சியால் பல மொழிகளில் கட்டமைக்கப்படும் கலைக்களஞ்சியமாகும். இது இலாபத்தை எதிர்நோக்காத விக்கிமீடியா அறக்கட்டளையின்  திட்ட ஆதரவுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

விக்கிப்பீடியா தமிழ் மொழி உள்பட மொத்தம் 279 மொழிகளில் உள்ளது. இதில் தமிழ் மொழியில் இதுவரை 28,023 கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகள் எண்ணிக்கை வரிசைபடி உலக மொழிகளில் தமிழ் மொழி 68-வது இடத்தில் உள்ளது. இந்திய மொழிகளில் இந்தி (67,589),  தெலுங்கு(47,386),  மராத்தி(32,598) மொழிகளுக்கு அடுத்த நிலையில் தமிழ் (28,036) கட்டுரைகள் இடம் பெற்று 4-வது இடத்தில் உள்ளது.

இந்த விக்கிப்பீடியாவை நீங்களும் தொகுக்கலாம். தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் உள்ளிட்ட முக்கிய தலைப்புகளில் இதில் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளது.

தமிழ் விக்கிபீடியா திட்டங்களை அறிமுகம் செய்து விளக்கப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் கலந்து கொண்டு பயன்பெறவும், தமிழ் விக்கிப்பீடியாவில் உங்கள் பங்களிப்பை செலுத்தவும் புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

கைப்பேசி: 94431 05825, மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com,

வலைப்பூ:  http://puduvaibloggers.blogspot.com,

இணையதளம்: www.pudhuvaitamilbloggers.org

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது புதுவைத் தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம் : தமிழோசை செய்தி

தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது

புதுவை தமிழறிஞர்கள் மாநாட்டில் தீர்மானம்

புதுச்சேரி, பிப்.1- தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களை  சேர்க்க்க்கூடாது என்றும், 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என்றும் புதுச்சேரியில் நேற்று முன்நாள் நடைபெற்ற தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் நேற்று முன்நாள் வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.

தமிழோசை, 01-02-2011

உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.

தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

  • தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது என்பதோடு, 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும்
  • எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது
  • தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
  • இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் மாநாட்டுத் தீர்மானங்கள்


ஊடகச் செய்தி
30.01.2011

பேராசிரியர் நா.இளங்கோ
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் சார்பில் இன்று (30-01-2011) காலை 10.30 முதல் 1.30 வரை வணிக அவை அரங்கில் ‘தமிழ் ஒருங்கு குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு’ நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் இரா.சுகுமாரன் தலைமைத் தாங்கினார். திரட்டி பொறுப்பாளர் வெங்கடேசு முன்னிலை வகித்தார். மாநாட்டுக்கு வந்திருந்த அனைவரையும் மென்பொருள் வல்லுனர் க.அருணபாரதி வரவேற்றார்.

இம்மாநாட்டை சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழித் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் தொடக்கி வைத்து உரையாற்றினார். மேலும், அவர் திரட்டி நிறுவனம் தயாரித்த கைபேசி மின்னூலினை வெளியிட்டார். அதன் முதல் படியை  மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலர் கோ.சுகுமாரன் பெற்றுக்கொண்டார்.

பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள்


இராம.கி அவர்கள்

உத்தமம் பொதுக்குழு உறுப்பினர் பொறியாளர் இராம.கி, தென்மொழி ஆசிரியர் மா.பூங்குன்றன், காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மைய தமிழ்த் துறை பேராசிரியர் நா.இளங்கோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்க அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, தமிழ்த்தமிழ் இயக்கத் தலைவர் க.தமிழமல்லன், இலக்கியக் பொழில் இலக்கிய மன்றத் தலைவர் பெ.பராங்குசம், புதுவை தமிழ் எழுத்தாளர் கழகப் பொறுப்பாளர் புதுவைத் தமிழ்நெஞ்சன், விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்புப் பொறுப்பாளர் தமிழநம்பி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இரா.சுகுமாரன்
கோ.சுகுமாரன் அவர்கள்

தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கத்தின் பொறுப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரையாற்றினார். புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக் குழு உறுப்பினர் ம.இளங்கோ நன்றி கூறினார்.

மா.பூங்குன்றன் அவர்கள்
இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்
    இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
  1. தமிழ் ஒருங்குறியில் கிரந்த எழுத்துக்களைச் சேர்க்கக் கூடாது. 26 கிரந்த எழுத்துக்களை தமிழில் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரையை ஒருங்குறி நிறுவனம் நிராகரிக்க வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
  2. எ, ஒ, ழ, ற, ன உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களைக் கிரந்த எழுத்தில் சேர்க்கக் கூடாது என ஒருங்கு குறி நிறுவனத்தை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.
  3. தமிழக அரசின் கருத்தை அறிந்த பின்பே மத்திய அரசு கிரந்தம் தொடர்பான எந்த முடிவையும் எடுக்க வேண்டும் என இம்மாநாடு வற்புறுத்துகிறது.
  4. இம்மாநாட்டில் கலந்துக் கொண்ட தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புத் தலைவர்கள், பார்வையாளர்கள் அனைவரும் கையொப்பமிட்ட மனு ஒன்றினை மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு.கபில் சிபல், தமிழக முதல்வர் மு.கருணாநிதி, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் தலைவர் நீதிபதி மோகன்,  அமெரிக்காவிலுள்ள ஒருங்குறி நிறுவனம் ஆகியோருக்கு அனுப்பி வைப்பது எனவும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.

இரா. சுகுமாரன், ஒருங்கிணைப்பாளர்.

புதுச்சேரியில் தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு எதிர்ப்பு மாநாடு: நிகழ்ச்சி நிரல்

தமிழ் ஒருங்குறியில் கிரந்தக் கலப்பு


எதிர்ப்பு மாநாடு


நாள் : 30.01.2011 ஞாயிற்றுக் கிழமை
நேரம் : காலை 9.00 முதல் 1.00 மணி வரை
இடம் : வணிக அவை (பாரதி பூங்கா எதிரில்), புதுச்சேரி.

தலைமை
திரு. இரா. சுகுமாரன் அவர்கள்
ஒருங்கிணைப்பாளர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
முன்னிலை
திரு. கோ.அ.செகநாதன் அவர்கள்,
தலைவர் உள்ளாட்சி மன்றங்களின் கூட்டமைப்பு
திரு. ஓவியர் இரா. இராசராசன் அவர்கள்
திரு. ஏ. வெங்கடேசு அவர்கள்,
திரட்டி,- தமிழ் வலைப்பதிவு திரட்டி
வரவேற்பு
திரு. க.அருணபாரதி அவர்கள்,
மென்பொருள் வல்லுநர்,

கைப்பேசியில் மின் நூல்வெளியிட்டு
மாநாட்டுத் தொடக்க உரை
பேராசிரியர் திரு. ந.தெய்வ சுந்தரம் அவர்கள்
தலைவர் (ஓய்வு), தமிழ்மொழித்துறை,
சென்னைப் பல்கலைக்கழகம்
மின் நூல் முதல் படி பெறுபவர்
திரு. கோ. சுகுமாரன்
செயலர், மக்கள் உரிமைக்கூட்டமைப்பு,
பொதுக்குழு உறுப்பினர், உத்தமம், (INFITT)

கருத்துரை

பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா அவர்கள்

புதுச்சேரி இயற்கைக் கழகம்

திரு. இராம.கி. அவர்கள் பொறியாளர்

பொதுக்குழு உறுப்பினர், உத்தமம் , (INFITT) சென்னை

பேராசிரியர் திரு. நா. இளங்கோ அவர்கள்,

தமிழ் துறை, காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையம், புதுச்சேரி

திரு. மா. பூங்குன்றன் அவர்கள்,

தென்மொழி , சென்னை

திரு. கோ. திருநாவுக்கரசு அவர்கள்,

தாளாண்மை உழவர் இயக்கம்

திரு. இரா. அழகிரி அவர்கள்,

தமிழர் தேசிய இயக்கம், புதுச்சேரி

திரு. ந.மு.தமிழ்மணி, அவர்கள்,

அமைப்பாளர், செந்தமிழர் இயக்கம், புதுச்சேரி

திரு. க. தமிழ் மல்லன் அவர்கள்,

தலைவர், தனித்தமிழ் இயக்கம், புதுச்சேரி

திரு. தமிழ நம்பி அவர்கள்,

விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பு

திரு. சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள்,

செயலர், தனித்தமிழ் கழகம், புதுச்சேரி

திரு. பெ. பராங்குசம் அவர்கள்,

தலைவர், இலக்கியப் பொழில் இலக்கியப் பாசறை, புதுச்சேரி.

திரு. தமிழ்நெஞ்சன் அவர்கள்,

புதுவைத் தமிழ் எழுத்தாளர் கழகம் புதுச்சேரி

திரு.ப. திருநாவுக்கரசு அவர்கள்,

தலைவர், நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி

மாநாட்டு நிறைவுரை

திரு. இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்

தமிழ் எழுத்துப் பாதுகப்பியக்கம்

நன்றியுரை:

திரு. ம. இளங்கோ, அவர்கள்

அமைப்புக்குழு உறுப்பினர், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்

20, 4வது தெரு விரிவாக்கம், அன்னை தெரேசா நகர்,
மூலக்குளம், புதுச்சேரி – 605 010.
செல்: +91 94431 05825

மின்னஞ்சல்: rajasugumaran@gmail.com, வலைப்பூ: www.puduvaibloggers.blogspot.com,

இணையம்: www.pudhuvaitamilbloggers.org

………….

அண்மைக்காலமாக இணையம், கணினி ஆகியவற்றின் பயன்பாட்டின் காரணமாக தமிழ் மொழியும் வளர்ந்துள்ளது என்று கருதலாம். இன்று உலகம் முழுதும் எளிமையாக தமிழில் தகவல் தொடர்புகள் செய்ய முடிகிறது. இந்த வளர்ச்சிக்கு ஒருங்குகுறி நடைமுறைக்கு வந்ததே காரணமாகும்.

ஒருங்குகுறி (Unicode) என்றால் என்ன?

ஒருங்குகுறி என்பது வரியுருக்களையும் எண்முறை உபகரணங்களில் பயன்படுத்துவதற்கென உருவாக் கப்பட்ட ஒரு குறிமுறை நியமம்.கணிப்பொறியில் ஆங்கிலம் உள்ளிட்ட சில மொழிகளைத் தவிர பிற மொழி எழுத்துக்களை எழுதுவதிலும் படிப்பதிலும் சிக்கல் நிறைந்து இருந்தது. எனவே, உலகில் உள்ள எல்லா மக்களும் கணினியில் எளிதில் பயன்படுத்த, உலகின் எல்லா எழுத்துமுறை களையும் உள்ளடக்கி ஒரு எழுத்துத் தரப்பாடு உருவாக்கப் பட்டது. அதற்குப் பெயர் தான் ஒருங்குறி எழுத்து முறையாகும்.

கணினி, அலைபேசி, கணினி இயங்குதளம் ஆகிய வற்றில் தமிழைப் பயன்படுத்த இந்த முறை மிகவும் அவசியம். இந்த முறையில் தமிழ் எழுத்துக்கள் கையாளப்படுவதால், தமிழ் மொழி கணினியில் தங்கு தடையின்றி செயல்பட முடியும். ஒருங்குகுறியில் தமிழ் கையாளப்படுவதால் இணையதளங்கள் தனியே எழுத்துருக் களை வைத்திருக்கத் தேவையில்லை.

முன்பெல்லாம் ஒவ்வொரு மென்பொருள் நிறுவனமும் புதுப்புது எழுத்துருக்களை உருவாக்கிச் சந்தையில் விற்பனைக்குத் தந்தன. ஒரு நிறுவன எழுத்தை நாம் படிக்க வேண்டும் என்றால் நம் கணினியிலும் அந்த எழுத்துரு இருக்க வேண்டும். அப்போதுதான் பிறர் அனுப்பும் கடிதங்களை, கோப்புகளைப் படிக்க முடியும், நாம் இன்று தமிழ் ஒருங்குகுறி எழுத்துருவைப் பயன்படுத்தி உலகின் எந்த மொழியினர் பயன்படுத்தும் கணினிக்கும் தமிழில் மடல்கள், கோப்புகளை அனுப்பினாலும் சிக்கலின்றி அனைவரும் படிக்க முடியும்.

கிரந்தம் என்பது என்ன?

கிரந்தம் ஒரு எழுத்து முறை, மொழியன்று. மொழியும் எழுத்துமுறையும் வேறுவேறானவை. தமிழர் உருவாக்கிய இக் கிரந்த எழுத்துக்கள் சங்கதமொழி எழுதவும், சமற்கிருதமொழி எழுத்தமைத்துக் கொள்ளவும் பயன்பட்டன. அற்றோடு, இக் கிரந்த எழுத்துக்கள், சமற்கிருதச் சொற்களைத் தமிழில் கலந்து எழுதி மணிப்பவள நடையினால் தமிழுக்குக் கேடு உண்டாக்கவும் காரணமாகின.

ஒருங்குகுறி சேர்த்தியம்

ஒருங்குகுறி சேர்த்தியம் என்பது உலகளவில் ஒருங்குகுறிகளை கட்டுப்படுத்தும் ஒரு அமைப்பு. அந்த அமைப்பு எல்லா மொழிகளுக்கும் தகுந்த இடம் ஒதுக்கி அவற்றை பராமரித்து வருகிறது. இந்த அட்டவணையில் கூட்டல், கழித்தல், மாற்றம் வேண்டுமாயின் இந்த அமைப்பிடம் தான் முறையிட வேண்டும். இந்தியா இந்தக் குழுமத்தில் ஓட்டுரிமை பெற்ற உறுப்பினராக உள்ளது. முன்பு தமிழக அரசும் உறுப்பினராக இருந்தது. இப்போது புதுப்பிக்காமல் விட்டு விட்டது.

ஒருங்குகுறியில் தமிழ்:

ஒருங்குகுறி சேர்த்தியம் ஒவ்வொரு மொழிக்குரிய எழுத்துகளுக்குத் தக்க இடங்களை ஒதுக்கி வைத்துள்ளது. தமிழ்மொழிக்கு 128 இடங்களை ஒருங்குகுறி சேர்த்தியம் அமைப்பு வழங்கியுள்ளது. சீன மொழிக்கு 5000க்கும் மேற்பட்ட இடங்களை ஒதுக்கியுள்ளது. தமிழின் 247 எழுத்துக்களையும் நாம் இந்த 128 இல் உள்ள 72 இடங்களிலேயே செயற்படுத்தி விட்டோம். தமிழ் எழுத்துக் களும், தமிழ் எண்கள், ஆண்டு, மாதம் சார்ந்த தமிழ்க் குறியீடுகளும், வழக்கில் உள்ள கிரந்த எழுத்துக்களும் (ஸ, ஷ, ஜ, ஹ, ஸ்ரீ) இந்த 72 இல் இடம்பெற்றுள்ளன. தமிழுக்குரிய மற்ற 56 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

‘‘தமிழ் நீட்சி’’ முன்மொழிவு

காஞ்சி சங்கர மடத்தை சேர்ந்த திரு. இரமண சர்மா என்பவர் இவ்வேளையில் ஒரு பரிந்தரை செய்துள்ளார். நிரப்பப்படாமல் உள்ள தமிழுக்குரிய 56 காலியிடங்களில் கிரந்த எழுத்துக்கள் 26ஐச் சேர்க்கும் முயற்சியே அப்பரிந்துரை. இதில் அவர் வடமொழி, செளராட்டிரம் போன்ற மொழிகளைத் தமிழ் எழுத்துக்களில் எழுத தேவநாகரி, தெலுங்கு முதலான மொழிகளைப் போலவே க1, க2 ,க3, க4 என வல்லின எழுத்துக்களின் எழுத்த ‡ மூச்சு வேறுபாடுகளைக் குறிக்கவும், ‘‘வடமொழி உயிரொலிகளுக்கும் என்று மொத்தம் 26 புதிய கிரந்த எழுத்துக்களை நுழைக்க வேண்டும் என்று கூறுகிறார். தமிழ் அட்டவணை யில் தமிழுக்குரிய 56 நிரப்பப்படாத இடங்கள் என்பது நமது வருங்கார பயன்பாட்டிற்கேயயாழிய வேற்று மொழியின்/எழுத்தின் ஆக்கிரமிப்புக்கு அல்ல.

கிரந்தத்தைத் தமிழில் கலந்தால் ஏற்படும் விளைவுகள்

பழைய மணிப்பிரவாள நடைக்கு வித்திடலாம். தெலுங்கு, மலையாளம் போன்ற புது மொழிகளுக்கு வித்திடலாம்.

வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீ இ

எழுத்தொடு புணர்ந்து சொல்லாகும்மே

தொல்காப்பியர் வடவெழுத்துக்களை நீக்கி தமிழை எழுதிடச் சொல்லும் போது , நாம் தெரிந்தே வேற்று எழுத்துக் களை நம் மொழியில் கலக்க அனுமதிப்பது தற்கொலைக்கு நிகரானது.

நாக.கணேசனின் பரிந்தரை

இரமண சர்மாவின் பரிந்துரைக்கு மாற்றாக முன்மொழியப்பட்டிருக்கிறது. என்னவென்றால் கிரந்த எழுத்துக்களுக்கு தனி அட்டவணைஅமைத்து, அதில் தமிழுக்கே உரிய சிறப்பு ஒலிகளை தரும் எழுத்துக்களை

(எ, ஒ, ழ, ற, ன, ஆகிய ஐந்தையும்) அதில் சேர்ப்பது.

மேலோட்டமாக பார்த்தால், தமிழ் எழுத்துக்களை தமிழ் மொழியைத் தாண்டி எடுத்துச் செல்லும் நாக. கணேசனின் முன்மொழிவு நன்மை பயப்பது போல் தோன்றும். அவர் எழுதுகிறார்.

‘‘இந்த ஐந்து எழுத்துக்களையும் சேர்ப்பதால், வருங்காலங்களில் தமிழர்கள் கிரந்தம் கலந்தே தமிழை எழுதுவார்கள் என்றும், மின்னஞ்சல்கள், இணையதளங் கள், வலைபூக்கள் ஆகியன கிரந்தம் கலந்தே எழுதப்படும் என்றும், இந்த ஐந்து எழுத்துக்களை சேர்க்காவிடில் தமிழ் மொழியை கிரந்தத்தைக் கொண்டு எழுத இயலாது’’ என்றும் கூறுவதை உணர முடிகிறது.

சுவாமிநாத தேசிகர் போன்றோர் தமிழ் மொழிக்கு ஐந்து எழுத்துக்கள் ( எ,ஒ,ழ,ற,ன) மட்டுமே உண்டு என்று பழித்தவர்கள், இன்று அந்த ஐந்து எழுத்தையும் கொண்டு கிரந்த அட்டவணையில் சேர்த்தால் வருங்காலச் சமூகம் தமிழ் மொழியை எழுத்தில்லா மொழி எனப் பழிக்கவும் கூடும். நமது கோரிக்கை, தமிழோடு கிரந்தத்தையும் கலக்க வேண்டாம், கிரந்தத்தோடு தமிழையும் கலக்க வேண்டாம்.

சிறீ இரமண சர்மாவின் முன்மொழிவு தற் போதைக்கு நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவே தோன்றுகிறது. இருப்பினும் நாம் தொடர்ந்து அதனைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நாக. கணேசனின் முன்மொழிவினால் ஏற்படக் கூடிய விளைவுகள் பற்றி ஆராய தமிழக அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.

தமிழில் பிறமொழிச் சொற்கள் கலந்தாலும், பிற மொழிகளின் எழுத்துக்கள் தமிழில் கலந்தாலும், பிறமொழி ஒலி தமிழில் கலந்தாலும், தமிழின் தனித் தன்மை கெடும். அவ்வாறு கெடாமல் செவ்வியல் மொழியான தமிழைப் பாதுகாப்பது தமிழர்களின் கடமையாகும்.

கைப்பேசியில் மின்னூல்

கிரந்த திணிப்பு எதிர்ப்பு மாநாட்டில் கைப்பேசியில் மென்னூல்கள் வெளியிடப்பட உள்ளது. தற்போது திருக்குறள், பாரதியார் பாடல்கள், பாவேந்தர் பாரதிதாசனின் பாண்டியன் பரிசி ஆகியவை வெளியிடப்பட உள்ளன. அவை வெளியிடப்பட்டவுடன் www.pyw3.com என்ற தளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த மென்பொருட்களை புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்தின் அமைப்புக்குழு உறுப்பினரும், திரட்டி வலைப்பதிவு திரட்டியின் நிர்வாகியுமான ஏ.வெங்கடேசு இவற்றை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள :agevenkat@gmail.com

தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு அறிஞர்கள் கண்டனம்!

நேற்று (நவ.3, 2010) சென்னையில் திருவல்லிக்கேணியில் உள்ள சிவ இளங்கோ இல்லத்தில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்க்காப்புக் கழகம், தமிழ் எழுத்துப் பாதுகாப்பு இயக்கம், புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம், தமிழர் சுற்றம், தமிழ் எழுச்சிப் பேரவை, இலக்குவனார் இலக்கிய இணையம், புரட்சிக்கவிஞர் பேரவை, தமிழ்ப்பண்பாட்டுச் சங்கம், மாநிலத் தமிழ்ச் சங்கம்,தமிழர் களம் ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழ்க்காப்புக் கூட்டம் நடைபெற்றது.

பேராசிரியர் பா.இறையரசன் தலைமைதாங்கிய இந்நிகழ்ச்சிக்கு அன்றில் பா.இறையெழிலன் வரவேற்புரை யாற்றினார். தொடக்கத்தில் கலைக்கடல் ஆத்மநாதன் தமிழ் வாழ்த்துப் பாக்களைப் பாடினார். கூட்ட ஒருங்கிணைப்பாளர் இலக்குவனார் திருவள்ளுவன் தொடக்கவுரையாற்றினார். முனைவர் க.ப.அறவாணன் நிறைவுரையாற்றினார். த.தே.பொ.தலைவர் பெ.மணியரசன், அண்ணாநகர் தமிழ்ச்சங்கச் செயலர் திரு நாகசுந்தரம் ஆகியோர் தீர்மானங்கள் தொடர்பில் உரையாற்றினர். மேலும், முன்னாள் மாநகரத்தலைவர் சா.கணேசன் கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன், பாவலர் இராமச்சந்திரன், பொறி.இ.திருவேலன், வா.மு.சே.திருவள்ளுவர், செம்மல், முனைவர் மு.கருணாநிதி, தென்னன் மெய்ம்மன், பொறி.அருட் கண்ணனார், மா.பூங்குன்றன், அரணமுறுவல், வெற்றிச் செழியன் எனப் பலரும் தீர்மானங்களை வழி மொழிந்தனர். கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. தமிழக அரசு எழுத்துச் சிதைவு முயற்சிகளை எந்த வகையிலும் ஊக்கப்படுத்தாது என்பதையும் தமிழ் எழுத்துக் காப்பே அரசின் நோக்கம் என்பதையும் தமிழக முதல்வர் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.

2. உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிராகத் தமிழ் எழுத்துப் பாதுகாப்பை வலியுறுத்திய பேராளர்கள் பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், பேராசிரியர் மணியம், பொறி.நாக. இளங்கோவன், இலக்குவனார் திருவள்ளுவன் ஆகியோரின் ஆய்வுரைகளை இணைய தளத்தில் ஒளிபரப்ப வேண்டும். இவற்றை ஒளிபரப்பாமல் இருட்டடிப்புச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. இப்பேராளர்களிடம் ஆய்வுக் கட்டுரைகளைப் பெற்று ஆய்வு மலரில் இடம் பெறச் செய்ய வேண்டும். ஆய்வு மலரில் இவர்களின் தமிழ்க்காப்பு ஆய்வுரைகள் இடம் பெறுவதைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தைத் தடுத்து இதே பெயரிலேயே பல்கலைக்கழக நிலையில் செயல்பட ஆவன செய்ய வேண்டும்.

5. அரசின் கொள்கைக்கு எதிராக இதன் இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள எழுத்துச்சிதைவு தொடர்பான எழுத்துச் சீரமைப்பு ஒலி-ஒளிக்காட்சிப் படங்களை அகற்ற வேண்டும். அரசின் கொள்கைக்கு மாறாக அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி இதனை இடம்பெறச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6. இந்தியப் பணமதிப்பைக் குறிக்க தேவநாகரி அல்லது இந்தி எழுத்து வடிவத்தைப் பின்பற்றாமல் வேறு குறியீட்டு வடிவம் பின்பற்றப்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வந்திருக்கும் குறிப்படங்களை வெளியிடச் செய்து மக்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் எழுத்தில்லா வேறு வடிவத்தைத் தேர்ந்தெடுக்கச் செய்ய வேண்டும்.

7. அறிவிக்கப்பட்ட செம்மொழித்தமிழ் விருதாளர்களுக்கான விருதுகளை உடனடியாக மேதகு குடியரசுத்தலைவர் மூலம் வழங்க வேண்டும்.

8. குறள்பீட விருதும் தொல்காப்பியர் விருதும் ஒவ்வோர் ஆண்டிற்குத்தான் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டுப் போன ஆண்டுகளுக்கும் இவ் விருதுகள் வழங்கப்படவேண்டும்.

9. உள்நாட்டு அறிஞருக்கான குறள்பீட விருது அறிவிக்கப்படவில்லை. 2004-05 ஆண்டு முதல் இவ்விருதிற்குரிய அறிஞர்களை அறிவிக்க வேண்டும்.

10. சமசுகிருதம், அரபி, பெர்சியன், பாலி/பிராகிருதம் முதலான மொழிகளைச் சேர்ந்த மூத்த அறிஞர்களுக்கு விருதுத்தொகைகள் அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஆண்டுதோறும் உரூபாய் 50,000 வழங்கப்படுகின்றன. சமசுகிருதத்திற்குச் செம்மொழி ஏற்பிற்கு முன்பிருந்தே ஆண்டிற்கு 15 மூத்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, தமிழில் ஆண்டுதோறும் 25 செம்மொழித் தமிழ் அறிஞர்களுக்கு வாணாள் செம்மொழி விருதுகளை வழங்க வேண்டும்.

11. சமசுகிருத இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் விளம்பரங்கள் வழங்குவதன் மூலம் மத்திய அரசு நிதியுதவி அளித்து வருகிறது. இதேபோல் நல்ல தமிழில் வரும் இதழ்களுக்கும் செய்தித்தாள்களுக்கும் கட்சி வேறுபாடு இன்றிஅரசு விளம்பர உதவி வழங்க வேண்டும். மத்திய அரசின் விளம்பர உதவிகள் இவற்றிற்குக் கிடைக்கவும் ஆவன செய்ய வேண்டும்.கொச்சை வடிவிலும் கிரந்த எழுத்துகள் முதலான பிற மொழி எழுத்துகளைப் பயன்படுத்தியும் அயற் சொற்களைக் கலந்தும் வெளிவரும் இதழ்கள், செய்தித்தாள்களுக்கு விளம்பரம் அளித்து வருவதை அரசு உடனே நிறுத்த வேண்டும்.

12. நல்ல தமிழ்ப் பெயர்கள் தாங்கியும் கதைப்பாத்திரங்களுக்கு நல்ல தமிழ்ப் பெயர்கள் சூட்டியும் தமிழ், தமிழர் நலனில் கருத்து செலுத்தியும் வரும் திரைப்படங்களுக்கு மட்டுமே அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும்.

13. இணைய மாநாட்டின் தொடர்ச்சியாகக் கணினியில் பயன்படுத்தப்படும் ஒருங்குறி எழுத்துருவில் கிரந்த எழுத்துகள் தமிழ் எழுத்துகள் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளன. பிற சமசுகிருத ஒலிப்பு எழுத்துகளையும் கணினி எழுத்துருக்களில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. இவற்றை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். ஆங்கிலம் முதலான பிற மொழி எழுத்துகளை அடைப்பில் குறிக்க வேண்டிய தேவை வரும் பொழுது எவ்வாறு அந்தந்த மொழி எழுத்துருக்களில் இருந்து அவற்றைக் கணியச்சிடுகிறோமோ அதேபோல் இந்த எழுத்துகள் தேவையெனில் சமசுகிருத எழுத்துருக்களில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, தமிழ் எழுத்துரு என்பது தமிழாக மட்டுமே இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரவேற்புரையில் அன்றில் பா.இறையெழிலன், செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் வழியில் அவர் நிறுவிய தமிழ்க்காப்புக் கழகச் செயற்பாடுகளைப் பின்பற்றிச் செயல்படப் போவதாகக் குறிப்பிட்டார்.

தலைமையுரையில் பேராசிரியர் பா.இறையசரன் ஒருங்குறியில் தமிழ் இடம் பெறப் பல போராட்டங்கள் நடைபெற்றன. ஆனால் சமசுகிருதம் எளிதில் தமிழைச் சிதைத்து நுழைய சதி செய்கிறது என்பது குறித்து விளக்கினார். எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எதிரான ஆய்வறிஞர்களின் கட்டுரைகளை உடனே இணையத்தளத்திலும் கருத்தரங்க மலரிலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் வேண்டினார்.

தொடக்கவுரையில் திரு இலக்குவனார் திருவள்ளுவன், எழுத்தைக் காப்போம், மொழியைக் காப்போம், இனத்தைக் காப்போம் என்னும் கொள்கைகளின் அடிப்படையில் தமிழ்க்காப்பு அமைப்புகள் ஒன்றுகூடியுள்ளதைக் குறிப்பிட்டார். அனைத்துத் தீர்மானங்கள் குறித்தும் விளக்கிய திரு இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ்க்காப்பு அமைப்புகளின் சார்பாக ஆசிரியர் வீரமணி ஐயா அவர்கள் மூலமாக மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களிடம் வேண்டுகோள் விடுத்ததற்கேற்ப அவர் 6.11.2010 அன்று நடைபெற உள்ள ஒருங்குறிக் கூட்டத்தில் கிரந்த எழுத்தைப் புகுத்த முயலும் இந்திய அரசின் தீர்மானத்தை வல்லுநர் குழுவின் கருத்திற்கேற்ப முடிவெடுக்கும் வகையில் அடுத்த கூட்டத்திற்கு (பிப்.26.2011) ஒத்திவைத்ததற்கு இருவருக்கும் நன்றி தெரிவித்தார். தமிழக அரசும் விரைந்துநடவடிக்கை எடுத்துத் தமிழ் அழிப்பு முயற்சியைத் தடுக்க வேண்டும் என்றார். இராமையா அன்பழகனாகவும் நாராயணசாமி நெடுஞ்செழியனாகவும் சின்னராசு சிற்றரசாகவும் மாறித் தமிழ்ப்பெயர் சூட்டிய இயக்கத்தின் ஆட்சியில், தொல்.திருமாவளவன் தமிழ்ப்பெயர் சூட்டும் இயக்கத்தையே நடத்துகையில், பிறமொழிப் பெயர்களுக்குத் தமிழ் எனச் சொல்லி வரிவிலக்கு அளிப்பதை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

நிறைவுரையாற்றிய மேனாள் துணைவேந்தர் முனைவர் க.ப.அறவாணன் எழுத்துச் சிதைவு முயற்சிகளுக்கு எப்போதும் முதல்வர் கலைஞர் துணை போக மாட்டார் என்றார். தமிழ்மானம், தமிழ்ப்பண்பாடு முதலானவை காப்பாற்றப்பட இணையத்தளம் வாயிலாகவும் வேறு வழியாகவும் தமிழை அழிக்கும் முயற்சிகளை அடியோடு எதிர்க்க வேண்டும் என்றார்.

பாவலர் மறத்தமிழ் வேந்தன் நன்றியுரை நவின்றார்.

அன்புடன்
இலக்குவனார் திருவள்ளுவன்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் எழுத்து மாற்றம்

மாலை மலர் செய்தித்தாளில் தமிழ் எழுத்துக்களை மீண்டும் மாற்றம் செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக 7 சனவரி 2010 அன்று செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதோடு கோவை உலகத்  தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஆய்வுப் – பொருண்மை களில் எழுத்து மாற்றம் தொடர்பான கலந்துரையரங்கமும் இருந்தது. (பார்க்க படம்-1) இதில் ஏழாவது கலந்துரையாக எழுத்துச் சீர்திருத்தம் இருந்தது.
இந்த கலந்துரையரங்கத்தில் தமிழ் எழுத்துக்களை சீர்திருத்துவது என்ற பெயரில் கட்டுரைகள் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மலேசியா, சென்னை, புதுச்சேரி ஆகிய இடங்களில்  நடைபெற்ற நிகழ்ச்சிகளின் மூலம் தமிழ் எழுத்துக்களை மாற்றுவது என்ற முடிவை மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. இதையொட்டி செம்மொழி மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தருமான திரு.இராசேந்திரன் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துக்கள் மாற்றுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்று தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் செம்மொழி மாநாட்டில் வீரமணி  எழுத்துமாற்றம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்திப் பேசினார். தமிழ் புத்தாண்டு மாற்றப்பட்ட போது  எதிர்ப்புகள் இருந்தது. அது பின்னர் ஆதரவாக மாறிப்போனது. அதேபோல எழுத்து மாற்றம் செய்யப்பட்டால் கொஞ்சம் எதிர்ப்பு இருக்கும் பின்னர் அடங்கிப் போகும். என தெரிவித்திருந்தார். அடுத்து முதல்வர் கருணாநிதியின் உரையின் முடிவில் கணினி உள்ளிட்ட பிரச்சனைகள் கணக்கில் எடுத்துக் கொண்டு  இறுதி நாளில் ஒரு பட்ஜெட் உரைபோல படிப்பேன் என்று கூறியது. தமிழ் எழுத்து மாற்றமும் உள்ளடக்கம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. என்பது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. அதோடு உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் மொழியியல் தலைப்பில் எழுத்து சீர்திருத்தம் தலைப்பிலான கட்டுரைகள் வாசிக்கப்பட்டது.
அந்த கட்டுரையை வாசித்த நாக.இளங்கோவன், இலக்குவனார். திருவள்ளுவன், பேராசிரியர் செல்வக்குமார், மணியம் ஆகியோர் எழுத்து மாற்றம் செய்தால் தமிழ் சீர்கேடடையும் என்ற கருத்தை முன்வைத்தனர். ஐந்து பேரில் மற்றுமொருவர் வீரமாமுனிவர் எழுத்துமாற்றம் ஏதும் செய்யவில்லை. ஏ, ஓ ஆகியவற்றில் மாற்றம் செய்யப்பட்டது வீரமாமுனிவர் காலத்துக்கு முந்தையது என கட்டுரை வாசித்தார்.

பொதுவாக ஆய்வரங்கங்களில் ஆட்கள் குறைவாக இருந்த நிலையில் எழுத்து மாற்றம் தொடர்பான  அரங்கம் நிறைந்து வழிந்தது. பலர் இடம் இல்லாமல் திருப்பிச் சென்றனர். அதே நேரத்தில் அந்த அமர்வு முடியும் வரை அரங்கம் விருவிருப்பாகவே இருந்தது.

தமிழறிஞர் நாக. இளங்கோவனுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்தது என நடுவர் அறிவித்து முடித்துவிடும் படி தலைவர் கூறிய போது அரங்கத்தில் இருந்தவர்கள், தலைவரின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது எங்கள் உயிராதார பிரச்சனை, எனவே அவரை பேசவிடுங்கள் என்று தெரிவித்த போது அரங்கம் விருவிருப்படைந்தது. பார்வையாளர்களின் கோரிக்கையின் அடைப்படையிலும், எதிர்ப்பின் அடிப்படையிலும் தலைவர் வேறு வழியில்லாமல் கால நீட்டிப்பு அளித்தார். மேலும் நேரமாவதால் தலைவர் மீண்டும் எச்சரித்தார். பேராசிரியர் செல்வக்குமார் அடுத்து கட்டுரை வாசிக்க இருந்ததால் தனது நேரத்தை விட்டுகொடுத்து நாக. இளங்கோவனை வாசிக்கும் படி சொன்னார். இருப்பினும் அவரால் குறித்த நேரத்தில் கட்டுரையை முடிக்க இயலவில்லை.

அடுத்து பேசிய பேராசிரியர் செல்வக்குமார் நாக. இளங்கோவனின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்று தான் என்று தன் பேச்சைத் தொடர்ந்தவர் தாம் என்ன சொல்லவருகிறார் எனபதை பதிவு செய்து எழுத்து மாற்றம் தமிழுக்கு கேடானது என வலுவான ஆதாரங்களுடன் எடுத்துரைத்தார்.

முன்னதாக மணியம் அவர்கள் வேறு அமர்வுக்கு தலைமை வகித்தமையால் வர இயலாமல் போனதால் அவரது அனுமதியுடன் அவரது நண்பர் எழுத்து மாற்றம் தேவையற்றது என்ற கருத்தை எடுத்துரைத்தார்.

27-06-2010 அன்று பேராசிரியர் பெஞ்சமின்.லெ.பொ எழுத்துச் சீர்திருத்தமா? தமிழுக்கது பொருத்தமா? என கேள்வி எழுப்பிய பேராசிரியர் எழுத்து மாற்றம் தேவையில்லை என்பதையே வலியுறுத்தினார்.

எழுத்து மாற்றம் செய்யாத அரசு எப்போதும் செய்யப் போவதில்லை என உறுதிப்படுத்த வேண்டும் என்பதே தமிழறிஞர்களின் இப்போதைய கோரிக்கையாகும்.

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் நாக.இளங்கோவன் உரை


எழுத்து மாற்றம்: தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறுவார்களாக! – விடுதலையில் வீரமணி அறிவுரை!!?

புதுச்சேரியில் நடைபெற்ற எழுத்து மாற்ற எதிர்ப்பு மாநாட்டில் புலவர் இளங்குமரனார் பேச்சை ஒட்டி விடுதலை நாளேடு கடந்த 20-05-2010 அன்று தலையங்கம் எழுதியுள்ளது. அந்த தலையங்கத்தில் தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறுவார்களாக! என அறிவுரை? வழங்கியுள்ளார்.

அந்த செய்தி விடுதலை இணையபக்கத்திலும் வெளிவந்துள்ளது.

விடுதலை தலையங்கச் செய்தி

எழுத்துச் சீர்திருத்தம்

புதுச்சேரியில் தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு ஒன்று கடந்த ஞாயிறு அன்று நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கு கொண்ட புலவர் ஆர். இளங்குமரனார் அவர்கள் தெரிவித்துள்ள கருத்தாவது:

தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தால், தமிழ் அறிந்தவர்கள் மீண்டும் புதிய தமிழைப் படிக்கவேண்டிய நிலை ஏற்படும். இதனால் தமிழில் ஏற்கெனவே உள்ள பல்லாயிரக்-கணக்கான அரிய நூல்களும், இணைய தளத்தில் பல்துறை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்கள் உள்ள செய்திகளும் பயனற்றுப் போகும் என்றெல்லாம் அச்சுறுத்தி உள்ளனர்.

தமிழ் மொழியின் வரலாற்றை எடுத்துக்-கொண்டால் இப்பொழுது உள்ளதுபோலவே தொடக்கத்திலிருந்து வருகிறது என்று சொல்ல முடியுமா? ஓலைச்சுவடி, கல்வெட்டுகளில் எப்படி-யெல்லாம் எழுத்துகள் இடம் பெற்றிருந்தன, இடையில் எத்தகைய மாற்றங்களுக்கு ஆளாகின என்பதெல்லாம் நம் மதிப்பிற்குரிய புலவர்களுக்குத் தெரியாதா?

தந்தை பெரியார் புகுத்திய எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டதால் என்ன சிரமம் ஏற்பட்டது? மேலும் எளிதாகப் படிக்கவும், கற்கவும் வசதி செய்து தரப்பட்டது. அது தவறா?

தமிழில் உள்ள 247 எழுத்துகளை எழுது-வதற்கு தந்தை பெரியார் அவர்களின் சீர்திருத்-தத்திற்குப் பிறகு 107 குறியீடுகள் தேவைப்-படு-கின்றன. அவற்றுள் உயிர் மெய், இகர, ஈகார, வரிசைக்கு 36 குறியீடுகளும், உயிர் மெய் உ-கர, ஊ-கார வரிசைக்கு 36 குறியீடுகளும், ஆக 72 குறி-யீடுகள் தேவைப்படுகின்றன. மற்ற அனைத்-திற்கும் வேண்டியவை 35 குறியீடுகள்தான்.

இதனால் எழுத்துகளின் எண்ணிக்கை குறைகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு எழுத்துகள் குறைகின்றனவோ, அவ்வளவுக்கவ்வளவு மொழியை எளிதில் கற்க முடியும். மேலை நாடுகளில் வாழும் தமிழ் வீட்டுப் பிள்ளைகள், தமிழே தெரியாமல் வளரும் நிலை இதனால் தடுக்கப்படும். உலகம் முழுவதும் தமிழ் மொழி பரவிட இதனால் அதிக வாய்ப்புக் கிட்டும்.

தெ.பொ.மீ. ,பேராசிரியர் கா.அப்பாதுரை, புலவர் குழந்தை, கி.வா.ஜ., பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் போன்றவர்கள் எல்லாம் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளனரே!

உலகில் பல மொழிகளிலும் இந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைபெற்றுதான் உள்ளது. ஜப்பானிய மொழி வலமிருந்து தொடங்கி செங்குத்து வரிசையில் எழுதப்படுவதாகும். அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இடதுபுறத்தில் இருந்து எழுதத் தொடங்கிவிட்டனர். பண்டைய வரிவடிவமான நஞ்ச்சியுடன் சுதாகான, ஹீரா கான என்ற புதிய வடிவங்களையும் உருவாக்கிக் கொண்டுள்ளனர்.

சீனாவில் 1956 இல் எழுத்துச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தோனேசிய நாடு முற்றிலுமாக பழைய வடிவங்களைப் புறக்கணித்து விட்டு ரோமன் வடிவை ஏற்றுக்கொண்டு விட்டது.

கேரளாவிலும் மலையாள மொழியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குஞ்சன் பிள்ளைக் குழுவின் பரிந்துரையை ஏற்று, மலையாள மொழியில் பயன்படுத்தப்பட்டு வந்த குறியீடுகளில் 75 விழுக்காடாகக் குறைத்துக் கொண்டுவிட்டது.

1935 இல் தந்தை பெரியார் தொடங்கிக் கொடுத்த எழுத்துச் சீர்திருத்தம் மேலும் வளர்ச்சித் திசை நோக்கிச் செல்வது, -அறிவியல் கண்ணோட்டத்தில் அவசியமேயாகும்.

எழுத்துச் சீர்திருத்தம் தமிழர்களிடையே பிரி-வினையை ஏற்படுத்திவிடும் என்கிற அளவுக்கு சில புலவர்கள் கருத்துத் தெரிவித்திருப்பது ஆச்சரியமானதே! அவர்கள் கூறும் கருத்துகளில் விளக்கமும் இல்லை_ விவரமும் இல்லை.

18- ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் ஏகார, ஓகார வரிசைகளில் மாற்றம் செய்துள்ளார். 20 ஆம் நூற்றாண்டில் தந்தை பெரியார் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தார். மாற்றம் என்பது ஒன்றுதான் மாறாதது. அதனை ஏற்றுக் கொள்ளத் தமிழ்ப் புலவர் பெருமக்கள் பக்குவம் பெறு-வார்களாக!

தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் செய்வதை கைவிடவேண்டும்- வலைப்பதிவர் சிறகம் வேண்டுகோள் – மாலை மலர் 22-05-2010

தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு? – தமிழக அரசியல் இதழில் கட்டுரை!

தமிழை சீர்குலைக்கிறதா தமிழக அரசு?
எழுத்து சீர்திருத்த பின்னணியில் சீறும் அறிஞர்கள்

தமிழ் மொழியை வளப்படுத்தும் வகையில் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அமைக்கப்பட்ட தனிக்குழு, 72 எழுத்துக்களில் மாற்றம் செய்யலாம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது” -தமிழக அரசின் இந்த அறிவிப்பு தமிழ் ஆர்வலர்களையும், கணினி வல்லுநர்களையும் கொதிப்படைய வைத்துள்ளது.
நடக்க இருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழ் மொழியில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்து அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ் இணைய பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக் குழு துணைத் தலைவருமான வா.செ.குழந்தைசாமி தலைமையில் ரகசியமாக நடந்துவருவதாக தமிழுணர்வாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

இந்நிலையில்தான், இந்தத் தமிழ் எழுத்து வடிவச் சீர்திருத்தத்தை எதிர்த்து புதுவையில் ‘புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்’ என்ற அமைப்பு, தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாட்டை நடத்தியிருக்கிறது.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான இரா.சுகுமாறனை சந்தித்து பேசினோம்.

“தமிழ் எழுத்தை மாற்றும் முயற்சியில் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி தி.மு.க. அரசின் ஊதுகுழலாக செயல்படுகிறார். அவர் எழுதியுள்ள கட்டுரையின்படி உயிர்மெய் எழுத்துக்களில் இகர, ஈகார, உகர, ஊகார வரிசைகளில் மாற்றுக் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கிறார். இதன்படி எழுத்து மாற்றம் செய்தால் தமிழ் மொழி அறிவியல் மொழியாகவும் கணினியில் எளிதில் பயன்படக் கூடிய மொழியாகவும் வளர்ச்சி பெறும் என கருத்தை முன் வைக்கிறார். ஆனால் 72 எழுத்துக்களின் மாற்றம் தமிழில் 59 சதவிகிதம் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் கணக்கிட்டு கூறியுள்ளனர். இது தமிழ் மொழியையே மாற்றி விடும். இதனால் தமிழில் ஏற்கனவே உள்ள பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களும் இணையத்தில் உள்ள பல்துறை சார்ந்த ஆயிரக்கணக்கான பக்கங்களில் உள்ள செய்திகளும் பயனற்றுப் போகும். தமிழ் அறிந்தவர்கள் மறுபடியும் இந்த புதிய தமிழை படித்தாக வேண்டும். குறைந்த கல்வி அறிவு பெற்றவர்கள் முற்றிலும் கல்லாதவர்களாக மாற நேரிடும். அதனால்தான் இந்த மாற்றத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம்” என்றார் ஆவேசமாக.

இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பின் செயலாளரும், உத்தமம் அமைப்பின் பொதுக்குழு உறுப்பினருமான கோ.சுகுமாறனை சந்தித்து பேசினோம்.

“உலக அளவில் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் இந்த எழுத்து மாற்றம் தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டுத் தமிழர்களை உலகத் தமிழர்களிடத்திலிருந்து தனிமைப்படுத்தும். இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சியோடு, தமிழர்களின் நிலையும் பின்னுக்குத் தள்ளப்படும். எழுத்து மாற்றம் வற்புறுத்துவோர் கூறும் காரணங்கள் எதுவும் ஏற்கும்படியாக இல்லை. எழுத்து மாற்றத்தால் கணிணிப் பொறியியல் உழைப்பு குறையும். குறைவாக செயல்பட முடியும் எனக் கூறப்படும் கருத்தை கணினி வல்லுநர்கள் சான்றுகளுடன் மறுத்துள்ளனர்.

எழுத்து மாற்றம் செய்ய வேண்டுமானால் பல்துறை சார்ந்த அறிஞர்கள் கொண்ட குழு அமைத்து மிக நுணுக்கமாக ஆராய்ந்து படிப்படியாக மக்கள் ஏற்கும்படி செய்ய வேண்டும். அதை விடுத்து அவசரக் கோலத்தில் அள்ளித் தெளித்ததைப் போல் தமிழ் எழுத்து மாற்றம் செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. மக்கள் தொகையில் முதலாவதாக இருக்கும் சீனாவில் கூட, அனைத்து அமைப்பினரையும் ஒன்று சேர்த்து குழு அமைத்து பொதுவாக எழுத்து மாற்றத்தை ஏற்படுத்தி அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தனர். அப்படித்தான் இந்த அரசும் செய்ய வேண்டும்” என்றார்.

இந்த மாநாடு குறித்து, ‘தமிழ் வரி வடிவ சீர்திருத்தமா? சீரழிப்பா?’ என்ற நூலின் ஆசிரியரும் மூத்த தமிழ் அறிஞருமான திருச்சி இளங்குமரனாரிடம் பேசினோம்.

“இந்திய மொழிகளில் மிகக் குறைந்த எழுத்துக் கொண்ட மொழி தமிழ்தான். அதில் ஏன் மாற்றம் கொண்டுவர வேண்டும்? தந்தை பெரியார் 11 எழுத்துக்களை மட்டும் மாற்றம் செய்தார். அதனால் எவ்வித இடையூறும் இல்லை. இதற்காக பெரியார் மிகப் பெரிய தண்டனை அனுபவித்தார். தமிழக அரசு அவரது புத்தகங்களை நூலகங்களில் வாங்க மறுத்தது. பின்பு எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அந்த எழுத்துக்கள் சீர்திருத்தம் நடைமுறைக்கு வந்தது. தமிழ்மொழி அழகிய நோக்கிலும் தத்துவ நோக்கிலும் மிகச் சிறப்பாக அமையப் பெற்றது.

பள்ளிக்கூடத்தில், நீதிமன்றத்தில், ஆட்சி ஆணை மொழியாக, கோவில் மற்றும் இசை மேடைகளில் தமிழ் இருக்க வேண்டும். இதைத்தான் 69-ல், ‘எல்லா நிலைகளிலும் தமிழ்’ என்று அண்ணா சொன்னார். ஆனால் அவரை முன் மாதிரியாக கொண்டு ஆட்சி செய்யும் கலைஞர் 35 ஆண்டுகள் ஆகியும் எந்த மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாதுகாக்கப்பட்ட ஒரு மொழியை 30 நாட்களில் தொலைக்கப் பார்க்கிறார் கலைஞர். இந்த சீர்திருத்தத்தின் மூலமாக மெல்லத் தமிழ் இனி சாகும். தமிழ் முற்றிலுமாக குழி தோண்டி புதைக்கப்படும்” என்றார் வேதனையோடு.

இதுகுறித்து அமெரிக்கத் தமிழ் சங்க அமைப்பாளரும், உலகத் தமிழ் அமைப்புகளின் பொதுச் செயலாளரும், வட அமெரிக்காவில் தமிழ் மேல்நிலைப்பள்ளி நடத்தி வருபவருமான சொர்ணம் சங்கரபாண்டியிடம் பேசினோம்.

“தமிழ் எழுத்துக்கள் சிரமமாக இருக்கிறது என்று அறிவியல் பூர்வமாக தமிழக அரசு நிரூபிக்கவில்லை. கற்பனையாகவே முடிவெடுக்கப்பட்டு தமிழ் எழுத்து வடிவத்தை எளிமைப்படுத்துகிறோம் என முடிவெடுத்துள்ளது. இது நம் வீட்டுக்கு நாமே தீ வைப்பதற்குச் சமம். தமிழர்களை திருமணம் செய்துகொண்ட வேற்று மொழியினர் கூட தமிழ் கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்கள் கூட தமிழ் எழுத சிரமம் என்று கூறியதில்லை. ஜப்பான், சீன மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எழுத்துக்கள் உள்ளன. இவற்றை எழுதும்போது அவர்களுக்கு சிக்கல் வந்ததில்லை. இணைய தளத்தில் கூட தங்குதடையின்றி புழங்குகின்றனர். எழுத்துமாற்றம் என்பது தமிழ் வழி கற்கும் அப்பாவி மாணவர்களை பாதிக்கும். எனவே இதனை அனுமதிக்கக் கூடாது” என்றார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் விழாக்குழு துணைத் தலைவரும், எழுத்துச் சீரமைப்பின் முக்கிய பங்கு வகிப்பவருமான வா.செ.குழந்தைசாமியிடம் இந்த எதிர்ப்புகள் பற்றியெல்லாம் பேசினோம்.

“இது பெரியார் முன் வைத்த எழுத்து சீரமைப்புக்கு அடுத்த கட்டம். தமிழ் மொழி கற்பது நேரம் அதிகமாக செலவிடப்படுவதாக அறியப்பட்டு அதை எளிமைப்படுத்தவே இந்த எழுத்து சீரமைப்பு. மேலும் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் அடுத்த தலைமுறைக்கு இனிமையாகவும், எளிமையாகவும் நேரத்தை சேமிக்கும் வகையிலும் எழுத்து மாற்றம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள 247 தமிழ் எழுத்துக்களுக்கு நாம் 107 குறியீடுகளை கற்கிறோம். இப்போது உள்ள சீர்திருத்தத்தின் படி 39 குறியீடுகள் கற்றாலே போதும். எனவே இந்த எழுத்து சீர்திருத்தம் அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.

ஏற்கனவே தற்கால சந்ததியினருக்கு தமிழ் தகறாராக இருக்கும் நிலையில், இந்த எழுத்து சீர்திருத்தம் தேவையா என்பதை அரசு ஆயிரம் முறை சிந்திக்க வேண்டும்.

மு.குகன்