Home > எழுத்து மாற்றம், புதுச்சேரி, புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் > எழுத்துச் சீர்திருத்தம் இல்லை: புதுச்சேரி மாநாட்டுக்கு வெற்றி – தினமணி 20-05-2010

எழுத்துச் சீர்திருத்தம் இல்லை: புதுச்சேரி மாநாட்டுக்கு வெற்றி – தினமணி 20-05-2010

சென்னை

எழுத்துச் சீர்திருத்தம் இல்லை: புதுச்சேரி மாநாட்டுக்கு வெற்றி

First Published : 20 May 2010 09:20:56 AM IST Last Updated :

புதுச்சேரி, மே 19: தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் இப்போது இல்லை என்ற அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்துக்குக் கிடைத்த வெற்றி என்று இதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இச் சிறகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரா. சுகுமாரன், அமைப்புக்குழு உறுப்பினர்கள் கோ.சுகுமாரன், பேராசிரியர் நா. இளங்கோ,ம. இளங்கோ, விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழநம்பி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஜனவரி மாதம் 7-ம் தேதி வெளியான செய்தி ஒன்றில் தமிழக அரசு எழுத்துச் சீர்திருத்தம் செய்யப் போவதாகவும், அதற்காக ஒரு தனிக்குழு அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழில் எழுத்து மாற்றம் கொண்டு வந்தால் பல்லாயிரக்கணக்கான அரிய தமிழ் நூல்கள், இணையத்தில் உள்ள அரிய தகவல்கள் பயனற்றுப் போகும் ஆபத்துள்ளது. இதற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.

இதன் ஓர் அங்கமாகவே புதுச்சேரியில் 16-ம் தேதி தமிழ் எழுத்து வடிவ மாற்ற எதிர்ப்பு மாநாடு நடத்தினோம். இதில் தமிழ் எழுத்து மாற்ற முயற்சியைக் கைவிட வேண்டும் என்று தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப் போவதில்லை என்று மாநாட்டின் ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான ம. ராஜேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் மற்றும் உலக அளவில் தமிழ் ஆர்வலர்கள் மேற்கொண்ட முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகும். மேலும் எழுத்து மாற்றம் செய்யப் போவதில்லை என்று தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து அதை முதல்வரோ அல்லது தொடர்புடைய துறை அமைச்சரோ அறிவிப்பு செய்து இந்தச் சர்ச்சைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

  1. No comments yet.
  1. No trackbacks yet.